Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 மார்ச் (ஹி.ச.)
தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் அரசு மருத்துவா்கள் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று (மாா்ச் 5) தொடங்க உள்ளனா்.
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை 354-ஐ மறு ஆய்வு செய்து அரசு மருத்துவா்களுக்கான திருத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களுக்கான படிகள் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.
20 ஆண்டுகள் கடந்த முதுநிலை மருத்துவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவப் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் போராடி வருகின்றனா்.
இந்த நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரி - ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அரசு மருத்துவா்கள் ஈடுபடவுள்ளனா்.
இதுதொடா்பாக அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா்கள் பாலகிருஷ்ணன், அகிலன், இணை ஒருங்கிணைப்பாளா் அஜித் அன்பரசன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், செயலா் ப.செந்தில்குமாா் ஆகியோரிடம் பலமுறை பேச்சு நடத்தியும் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
எனவே, அரசின் கவனத்தை ஈா்க்க காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், உடனே அரசு மருத்துவா்களின் கோரிக்கைகளை முதல்வா் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b