Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 05 மார்ச் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தில் மதுபோதையில் 3 இரு சக்கர வாகனத்தில் வந்த 9பேர் கும்பல் தெருவிற்குள் புகுந்து கண்ணில் படுபவர்களை வெட்டிவிட்டு தப்பி சென்ற நிலையில் அதற்கான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாங்குநேரி சம்பவம் போல் அதன் ஈரம் காய்வதற்குள் அடுத்து ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரையை அடுத்துள்ள இடைக்காட்டூர் மேலத்தெருவில் ஆதி திராவிட மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவர் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தபோது அந்த பேருந்து நிறுத்தம் வழியாக அருகில் இருந்த மதுபான கூடத்திற்கு சென்ற கும்பல் ராஜூவிடம் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதனை அடுத்து ராஜூ அங்கிருந்து தப்பி தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
ஆனால் விடாமல் 3 பைக்குகளில் துரத்தி வந்த கும்பல் ராஜூ வசிக்கும் தெருவிற்குள் புகுந்து கண்ணில் படும் நபர்கள் அனைவரையும் தங்களது கைகளில் வைத்திருக்கும் வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். இதில் தெருவில் நின்றிருந்த பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் காயம் ஏற்பட்டதுடன் இதில் தினேஷ், ராஜேந்திரன், சுப்ரமணியன் ஆகியோர் படுகாயமடைந்ததுடன் இதனை கண்ட மற்றவர்கள் பயந்து ஓடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து காவல்துறையிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் நடந்த இந்த சம்பவத்தை வெளியே கூற வேண்டாம் என இந்த மக்களை மிரட்டியதுடன் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே சம்பவம் நடைபெற்றபோது அப்பகுதியில் பதிவான சி.சி.டி.வி காட்சிகள் தற்சமயம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் இதேபோல கும்பல் ஒன்று தெருவிற்குள் புகுந்து சராமாரியாக வெட்டியதில் இருவர் கொலை செய்யப்பட்டு அந்த சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் மற்றோரு சம்பவம் அதேபோல மானாமதுரை பகுதியில் அரங்கேறியிருப்பது பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்தப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தெரிவிக்கையில்,
இதுபோன்ற கடந்தாண்டும் பள்ளி மாணவர்கள் மீது இதுபோன்று சிலர் வெட்டி விட்டு சென்றனர் ஆனால் அவர்கள் தற்பொழுது சிறைக்கு சென்று மீண்டும் வெளியே வந்துள்ளனர்.
தொடர்ந்து எங்கள் பகுதியில் இது போன்ற அடிக்கடி நடைபெறுகிறது.
ஆனால் காவல்துறையினர் பெயரளவுக்கு மட்டுமே விசாரணை செய்து வருகின்றனர். என்று கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam