Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 06 மார்ச் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அடுத்த சட்டமங்கலம் பகுதியில் அமைந்துள்ள மிகப்பழமை வாய்ந்த ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இக்கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த சில தினங்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்த விழாவின் முக்கிய நிகழ்வான இன்று, வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியங்கள் இசைக்க யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.
கோவில் கோபுரத்தின் மேலே கொண்டு செல்லப்பட்ட புனித நீரானது கலசங்களுக்கு ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. ஓம் சக்தி பராசக்தி மற்றும் கோவிந்தா கோஷங்களுடன் பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சட்டமங்கலம் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.
விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
Hindusthan Samachar / GOKILA arumugam