Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 06 மார்ச் (ஹி.ச)
கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள பார்சன் குடியிருப்பில் ஆயுர்வேத மருத்துவரான ராம்குமார் குட்டி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட இவர் இங்கு பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் பணி நிமித்தமாக மருத்துவர் ராம்குமார் தனது குடும்பத்துடன் வியட்நாமிற்கு சென்றுள்ளார்.
வீட்டில் ராம்குமார் குட்டியின் தாயார் கஸ்தூரி (வயது 82) மட்டும் இருந்துள்ளார்.
அவருக்கு துணையாக நேபாளத்தைச் சேர்ந்த பணிப்பெண்ணும் இருந்துள்ளார். இந்த நிலையில், இன்று (மார்ச் 06) காலை ராம்குமார் தனது தாயாரை தொலைபேசியில் தொடர்புக் கொண்டுள்ளார்.
போன் எடுக்காத நிலையில் அக்கம்பக்கத்தினரை தொடர்புக் கொண்டு என் வீட்டிற்கு சென்று தாயாரை தொலைபேசியில் அழைக்க சொல்லுங்கள் என்று பணிந்தார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது மூதாட்டி கஸ்தூரி கை, கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர், கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களைச் சேகரித்த காவல்துறையினர், மோப்ப நாய் உதவியுடன் தேடுதலிலும் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டின் பின்புறம் வீசப்பட்டிருந்த கஸ்தூரியின் செல்போனை மீட்டனர்.
விசாரணையில் வீட்டில் இருந்த நகைகளும் திருடுப் போனது தெரிய வந்தது.
Hindusthan Samachar / ANANDHAN