Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 06 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை (Airline Reservation Executive) மற்றும் கேபின் குழு பணியாளர் (Airline Cabin Crew Course) பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களாகவும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதங்கள் ஆகும்.
இப்பயிற்சியில் விமான டிக்கெட் முன்பதிவு முறை, வாடிக்கையாளர் சேவை, தொடர்புத்திறன், ஆளுமை மேம்பாடு, விமான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கேபின் குழுபணிகள் குறித்து தொழில் முறை பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சி திருப்பூர் மாவட்டத்தில் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை முழுமையாக முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் தகுதியுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும்.
இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் திருப்பூரில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b