Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 மார்ச் (ஹி.ச)
தமிழகத்தில் திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கடும் மோதல் நிலவி வந்தது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்ததும் அதுதொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்து வந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை மார்ச் 5 அன்று ராஜினாமா செய்தார். இதையடுத்து மேற்கு வங்கத்துக்கான புதிய ஆளுநராக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் பொறுப்பை கேரள மாநில ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கூடுதலாக வகிப்பார் என குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மரியாதை நிமித்தமாக அவரை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சால்வை அணிவித்து திருவள்ளுவர் சிலையை வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் .
அதேபோல சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நேற்று பதவியேற்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b