Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 மார்ச் (ஹி.ச.)
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாயின் குறுக்கே உள்ள பாலத்தை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை தாமஸ் ஐயாதுரை இன்ஃப்ராஸ்ட்ரக்சர் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், காளியம்மன் கோவில் தெருவில் உள்ள விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாயின் குறுக்கே உள்ள பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலத்தை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை தாமஸ் ஐயாதுரை இன்ஃப்ராஸ்ட்ரக்சர் தனியார் நிறுவனத்திற்கு ரூ.12.31 கோடி மதிப்பில் வழங்கியுள்ளது.
இத்திட்டத்தை 180 நாட்களுக்குள் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நான்கு வழிச் சாலைக்கு இணையாக ஒரு புதிய அகலமான பாலத்தை அமைப்பதும், மறுசீரமைக்கப்பட்ட இந்தப் பாலம் போக்குவரத்து இயக்கத்தை மேம்படுத்துவதோடு, சாலைப் பாதுகாப்பை அதிகரிக்கவும், மற்றும் சுற்றியுள்ள குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்கு இடையே தடையற்ற இணைப்பை வழங்குவதையும் நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்படுகிறது.
இந்தப் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, பொதுமக்களுக்கான போக்குவரத்து வசதியையும் பயண எளிமையையும் கணிசமாக மேம்படுத்துவதோடு, அந்தப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன் அவர்கள் முன்னிலையில், சென்னை மெட்ரோ நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் திரு. டி. லிவிங்ஸ்டோன் எலியேசர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), மற்றும் தாமஸ் ஐயாதுரை இன்ஃப்ராஸ்ட்ரக்சர் தனியார் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர். தாமஸ் ஐயாதுரை, ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் டாக்டர். டி. ஜெபசெல்வின் கிளாட்சன் (ஒப்பந்தம் கொள்முதல்), ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN