Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 மார்ச் (ஹி.ச.)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
ஒருவழியாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் அறிக்கை, பரப்புரை என அடுத்தகட்ட நடவடிக்கைகளில் திமுக இறங்கியுள்ளது.
நாளை மறுநாள் (மார்ச் 9) திருச்சியில் திமுக மாநாடு நடைபெறும் நிலையில் தொண்டர்களுக்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
கழக வரலாற்றில் திருப்புமுனைகளுக்கெல்லாம் அடித்தளமிட்ட திருச்சியில் மார்ச் 9 கூடுவோம்!
#StalinStatement-இல் சொன்னதெல்லாம் நனவாக அடுத்த 5 ஆண்டுகளும் கழக ஆட்சிதான் என்பதை உறுதிசெய்வோம்!
மலைக்கோட்டை மாநகரின் மாநாடு மற்றுமொரு மகத்தான வெற்றியைப் பெறும் ஊக்கத்தை உடன்பிறப்புகளுக்கு வழங்கிடட்டும்!
உறுதியாகச் சொல்கிறேன்... வெல்வோம் 200, படைப்போம் புது வரலாறு!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b