Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 மார்ச் (ஹி.ச.)
சென்னை எழும்பூர் மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் மற்றும் நுழைவு வாயில்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து,சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தென்னக இரயில்வேயால் எழும்பூர் இரயில் நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளின் காரணமாக, எழும்பூர் மெட்ரோ இரயில் நிலையத்தின் வாகன நிறுத்துமிடம் வரும் 09.03.2026 முதல் மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக நிறுத்தப்படுகிறது. எனவே, பயணிகள் அருகிலுள்ள மற்ற மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள எழும்பூர் மெட்ரோவின் நுழைவு வாயில்கள் B1 மற்றும் B2 மட்டுமே பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்திருக்கும். கட்டுமானப் பகுதியில் உள்ள மற்ற அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்படும். எனவே, பயணிகள் தங்களின் நுழைவு மற்றும் வெளியேற்றத்திற்கு நுழைவு வாயில் B1 மற்றும் B2 (பூந்தமல்லி நெடுஞ்சாலைப் பக்கம்) ஆகியவற்றை மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் கட்டுமானப் பணிகளின் சீரான முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு இந்தத் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு வழிகாட்ட போதுமான தகவல் பலகைகளும், மெட்ரோ இரயில் நிலைய பணியாளர்களும் பணியில் இருப்பார்கள்.
இதனால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வருந்துகிறது மற்றும் பயணிகளின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b