Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 மார்ச் (ஹி.ச.)
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, தி.மு.க கூட்டணியில், ஒவ்வொரு கட்சிகளாக அழைத்து அவரவர்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து முதலமைச்சர் பேசிக்கொண்டு இருக்கிறார்.
இந்த தொகுதி ஒதுக்கீடுகள் முடிந்த பின்பு, அடுத்த கட்டமாக எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
அவ்வாறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும்போது, எங்கெல்லாம் கடுமையான போட்டிகள் இருக்கிறதோ, அந்தத் தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை போட்டியிட செய்து, எதிரணியினரை தோல்வி அடைய செய்வார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில், இந்த வித்தியாசமான அனுபவத்தை முதலமைச்சரிடம் நான் முதல்முறையாக பார்த்தேன்.
முன்பெல்லாம், எங்கே போட்டி கடுமையாக இருக்கிறதோ? அந்தத் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுப்பார்கள். ஆனால், முதல் முறையாக, தமிழ்நாட்டு அரசியலில் ஏறக்குறைய 40 ஆண்டுகால எனது அரசியல் வாழ்க்கையில், முதலமைச்சர் வித்தியாசமான அணுகுமுறையை மேற்கொண்டார்.
கூட்டணி கட்சிகளை அழைத்து, கடுமையான போட்டிகள் உள்ள தொகுதிகளில், நீங்கள் வெற்றி காண முடியாது.
எனவே, அந்தத் தொகுதிகளை நான் எதிர் கொள்கிறேன் என்று கூறி, சவால்களை தானே சந்திக்க தயாராக உள்ளார்.
எனவே, கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு நல்லபடியாக நடந்து முடியும்.
எடப்பாடி பழனிச்சாமி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சராக மட்டுமல்ல, எதிர்க்கட்சி தலைவராக கூட ஆக முடியாது.
அவர் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் இனிமேல் அமர்வதற்கு வாய்ப்பே இல்லை.
ராகுல் காந்தி 5 மாநில தேர்தல்கள் நடக்கும் அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொண்டு இருக்கிறார்.
எனவே, ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கும் அவசியம் பரப்புரை செய்ய வருவார்.
காங்கிரஸ் கட்சியில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்கள் கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்துவதற்கு, ஸ்கிரீனிங் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
எனவே வெகுவிரைவில், நேர்காணல் தொடங்க இருக்கிறது.
நடிகர் விஜய் நடிகை திரிஷாவுடன் ஜோடியாக திருமண வரவேற்பு விழாவுக்கு சென்றது, அவருடைய தனிப்பட்ட விவகாரம். அதைப்பற்றி எல்லாம் பேசிக்கொண்டே இருப்பது நாகரிகமாக இருக்காது.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கீடு மகிழ்ச்சியானதாக இல்லை.
ஆனாலும், நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று கிரீஷ் சோடங்கர் கூறியது அவருடைய கருத்து.
தொகுதிகளை மனநிறைவுடன் ஏற்றுக் கொள்கிறோம் என்பது எனது கருத்து என்று அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN