Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 மார்ச் (ஹி.ச.)
உலகம் முழுவதும் நாளை
(08-03-26) மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி, குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில், மக்களவை சபாநாயகராக மீராகுமார் ஆகியோரை பதவியில் அமர்த்திய பெருமை காங்கிரஸ் பேரியக்கத்தையே சாரும். மகளிர் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென்பதில் காங்கிரஸ் கட்சி எப்போதுமே முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்து, அது தற்போது 50 சதவிகிதமாக உயர்வதற்குக் காரணமாக இருந்தவர் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள். நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவிகித இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவதற்காக மாநிலங்களவையில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியவர் அன்னை சோனியா காந்தி. ஆனால், 2021 இல் நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு காலம் தாழ்த்தி வருகிறது. மகளிர் மசோதாவையும் நிறைவேற்றாமல் கண் துடைப்பு நாடகத்தை நடத்தி வருகிறது. மகளிர் தங்களது உரிமைகளை பெறுவதோடு, பொருளாதார ரீதியாகவும் உயர்வடைந்து, அவர்களது லட்சியங்கள் நிறைவேறுவதன் மூலமே வாழ்வு ஏற்றம் பெறும்.
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, பெண்களுக்கு எதிரான பாகுபாடு,வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது. மகளிருக்கு சமஉரிமை, சமவாய்ப்பு வழங்குவதோடு, சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அவர்களுக்கு முழுமையாக கிடைக்கும் வகையில் நல்ல சூழல் உருவாக வேண்டுமென்பதே சர்வதேச மகளிர் தினத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக அனைத்து மகளிர் சமுதாயத்தினருக்கும் உலக மகளிர் தின நல் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b