Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 08 மார்ச் (ஹி.ச)
இந்தியாவின் முதல் குடிமகளை அரசியல் காரணங்களுக்காக மேற்கு வங்க முதலமைச்சர் அவமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
மேற்கு வங்கத்தில் சந்தாலி பழங்குடியின மக்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரு வகைகளில் திட்டமிட்டு அவமதித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
இந்தியாவின் முதல் குடிமகளை அரசியல் காரணங்களுக்காக மேற்கு வங்க முதலமைச்சர் அவமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
எந்த மாநிலத்திற்கு குடியரசுத் தலைவர் சென்றாலும் அவரை அம்மாநில முதலமைச்சர் அல்லது முதலமைச்சரால் வர முடியாத சூழலில் அம்மாநில அமைச்சர்கள் வரவேற்க வேண்டும் என்பது தான் புரோட்டாகால் ஆகும். ஆனால், Bagdogra விமான நிலையத்தில் குடியரசுத் தலைவரை அரசின் சார்பில் சிலிகுரி மேயர் மட்டும் தான் வரவேற்றுள்ளார்.
அதேபோல், குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த சர்வதேச சந்தாலி பழங்குடியின மக்களின் மாநாடு கடைசி நேரத்தில் பிதாநகர் பகுதியிலிருந்து பாக்தோக்ரா விமான நிலையம் அருகேயுள்ள கோஷாய்பூருக்கு மாற்றப்பட்டது. அங்கு சந்தாலி பழங்குடியினரால் வர முடியாது என்பதால் மாநாட்டிற்கு அதிகம் பேர் வரவில்லை, இரு நிகழ்ச்சிகளும் திட்டமிட்டு குடியரசுத் தலைவரை அவமதிக்கும் நோக்குடன் நடந்துள்ளன.
குடியரசுத் தலைவர் அனைவருக்கும் பொதுவானவர். அதிலும் குறிப்பாக இந்திய வரலாற்றில் முதன்முறையாக பழங்குடியின சமூகத்திலிருந்து ஒரு பெண்மணி குடியரசுத் தலைவராக்கப்பட்டுள்ளார்.
அவரை அவமதிப்பது ஒட்டுமொத்த பெண் குலத்தையும், பழங்குடியினரையும் அவமதிக்கும் செயலாகும். முதலமைச்சர் போன்ற உயர்ந்த பொறுப்புகளில் இருப்பவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ