Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 மார்ச் (ஹி.ச.)
கடற்கரையில் திருமண ஏற்பாடுகளை செய்யும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், பீச் வெட்டிங் என்ற கடற்கரை கல்யாண திட்டத்தை, புதிதாக துவங்கி உள்ளது. அதன்படி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலக அனுமதியுடன், இனி கடற்கரையில் திருமணம் செய்து கொள்ள முடியும்.
இதுகுறித்து, தமிழக சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது, வெளிநாட்டு கலாசாரத்தில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சுற்றுலா திட்டங்களை தவிர்த்து, கடற்கரை திருமணம் என்ற முறையை பலரும் எதிர்பார்க்கின்றனர்.
எனவே, பீச் வெட்டிங் என்ற திட்டம், தற்போது துவக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே தனியார் வாயிலாக, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், அரசு சார்பில் குறைந்த விலையில், இதில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.
முன்பதிவு முதல் கட்டமாக, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, மாமல்லபுரம் தமிழ்நாடு ஹோட்டல் ரிசார்ட்டில், இது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
அங்குள்ள கடற்கரை மணல் வெளியில், திருமண நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்தலாம்.
முன்பதிவு மற்றும் கூடுதல் விபரங்களை, www.ttdconline.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b