Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 08 மார்ச் (ஹி.ச)
பெண்களின் நல்வாழ்விற்கும் பாதுகாப்பிற்கும் தடையாக இருக்கும் சமூகம், நியாயமான சமூகமாக இருக்க முடியாது என தமிழக வெற்றி கழகத்தில் தேர்தல் பிரச்சார மேலான் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
சமத்துவம், சமூக விடுதலை, சரிநிகர் உரிமை என தங்கள் தேவைகளுக்காக தாங்களே மாபெரும் வரலாற்றுப் போராட்டத்தை நடத்திய மகளிரின் சிறப்புகளை போற்றும் நாளாக உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
சமூகத்தில் பாலின ஏற்றத்தாழ்வு நிலை ஒழிய வேண்டும். எல்லோருக்கும் எல்லாமுமான உலகம் உருவாக வேண்டும்.பெண்களின் உறுதியான பெண்ணுரிமை போராட்டங்களே அவற்றைச் சாத்தியப்படுத்தும்.
சாதி, மதம், கலாசாரம் போன்ற பல்வேறு விதங்களில் பெண்களை அடிமைப்படுத்திய சமூகத்தை, தங்கள் சுதந்திர ஆற்றலால் வென்றெடுத்தார்கள் பெண்கள். இன்று, சமூகத்தின் அனைத்து துறைகளிலும் பேராளுமையாகச் சாதனைப் படைத்து வருகிறார்கள். இந்நிலையில், ஒரு பொறுப்புமிக்க அரசு மற்றும் சமூகத்தின் கடமை என்பது பெண்களின் வெற்றிக்குத் துணை நிற்பதாகும்.
பெண்களின் நல்வாழ்விற்கும் பாதுகாப்பிற்கும் தடையாக இருக்கும் சமூகம், நியாயமான சமூகமாக இருக்க முடியாது. எனவே இனிவரும் காலத்தை, பெண்களின் கல்வி தொடங்கி, பொருளாதார சுதந்திரம், அரசியல் அதிகாரம் வரை அனைத்தையும் உறுதிப்படுத்தும் காலமாக வென்றெடுப்போம்.
சமத்துவ உரிமைக்காகக் களமாடும் மகளிர் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ