Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 மார்ச் (ஹி.ச)
நாடாளுமன்ற மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்பது ஒரே நாடு, ஒரே தேர்தல்
(One Nation One Election) எனும் திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் கடந்த 1967ஆம் ஆண்டு வரை ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்ற போது சில மாநில அரசுகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் இந்த முறை மாறியது.
அதனை தொடர்ந்து ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, இத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.
அதோடு அடிக்கடி தேர்தல் நடத்துவதால் ஏற்படும் பெரும் செலவுகளைக் குறைக்கலாம். தேர்தல் நடத்தை விதிமுறைகளால் வளர்ச்சிப் பணிகள் தடைப்படுவது தவிர்க்கப்படும்.பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசு ஊழியர்களை மீண்டும் மீண்டும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவது குறையும் எனக் கூறப்படுகிறது.
அதே சமயம் மாநில அரசுகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டால், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி பாதிக்கப்படும். தேசிய அளவிலான கருத்தாக்கங்களின் தாக்கத்தால் மாநிலங்களின் உள்ளூர் பிரச்சனைகள் கவனிக்கப்படாமல் போக வாய்ப்புள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசியலமைப்பில் பல்வேறு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் உள்ளிட்டவை பாதக அம்சங்களாகக் கருதப்படுகின்றன.
இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நோயை விட மோசமான ஒரு தீர்வாகும் எனக் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குக் கட்டுரை எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
இது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தர்க்கத்தையே தலைகீழாக மாற்றுகிறது. சட்டசபை கலைப்பை ஒரு நிர்வாக அசௌகரியமாகக் கருதுவதுடன், சட்டமன்றப் பொறுப்புக்கூறலை வலுவிழக்கச் செய்து இந்தியாவை ஒரு பகுதி அதிபர் ஆட்சி முறையை நோக்கி மெல்லத் தள்ளுகிறது.
சட்டமன்றத்தின் மீதான நம்பிக்கை சரிந்ததால் அல்லாமல், வெறும் தேசிய தேர்தல் கால அட்டவணையோடு ஒத்துப்போக வேண்டும் என்பதற்காக மாநில மக்களின் ஆணை துண்டிக்கப்படுவதை இது அனுமதிக்கிறது.
மேலும், தேர்தல் ஒத்திசைவு என்ற பெயரில் நீண்டகாலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சியை அனுமதிப்பதன் மூலம், இது கூட்டாட்சித் தத்துவத்தை மீறும் அபாயத்தையும் உருவாக்குகிறது.
அரசியலமைப்பு சமநிலை மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்களைப் பொறுப்புக்கூறச் செய்யும் மக்களின் உரிமை ஆகியவற்றைப் பலிகொடுத்துவிட்டு, நிர்வாக வசதிக்காக இந்தியாவின் ஜனநாயகத்தை மறுவடிவமைப்பு செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b