Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 09 மார்ச் (ஹி.ச.)
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் திமுகவின் பிரம்மாண்ட மாநில மாநாடு இன்று (மார்ச் 9) நடைபெறுகிறது.
சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டில் பங்கேற்பதற்க வரும் தொண்டர்கள் எவ்வித சிரமமும் இன்றி மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக பிரம்மாண்ட எல்இடி டிவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.
5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களுக்கு சைவ, அசைவ உணவுகள் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
இதற்காக 700 அடுப்புகள் அமைக்கப்பட்டு, சுமார் 1,100 தன்னார்வலர்கள் உணவு சமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
20 இடங்களில் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
30 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த இடம் தயார் படுத்தப்பட்டுள்ளது.
மாநாட்டின் முகப்பு பகுதியில் 110 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கொடி கம்பத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கழக கொடியேற்றி வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து 500 மீட்டர் நீளம் ராம்ப் வாக் பாதையில் முதல்வர் நடந்த சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார்.
அதனைத் தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தருகிறார்.
மாலை 5 மணி அளவில் மாநாட்டில் பங்கேற்கிறார்.
மாநாட்டில் வருகிற சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மாநாட்டு திடலில் இன்று காலை ஆய்வு மேற்கொண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறும் போது,
மாநாட்டிற்காக 3 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து வருகை தரும் 4 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகள் உள்பட மத்திய மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளிலும் இந்தத் தேர்தலில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.
இது போன்ற மாநாடுகளைத் தொடர்ச்சியாக நடத்துவதன் மூலம் தலைவருக்கு கட்சி நிர்வாகிகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களுக்கு கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து புதிய உத்வேகமும் கிடைக்கும்.
என்று கூறினார்.
Hindusthan Samachar / vidya.b