Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 09 மார்ச் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் அருகேயுள்ள குமாரபாளையம் பகுதியில், வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை கடத்தி இளைஞன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பதை பதைக்க வைக்கின்றது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட சிறுமி முழு மன மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய நாம் அனைவரும் உறுதுணையாக நிற்போம்.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் @arivalayam-த்தின் அவல ஆட்சியில், பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தையைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யுமளவிற்கு குற்றவாளிக்குத் துணிச்சல் மிகுந்துள்ளது வெட்கக்கேடானது.
தம்மை நம்பி வாக்களித்த பெண்களையும், அவர்களின் குழந்தைகளையும் பாதுகாக்கத் தவறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு தமிழகப் பெண்களை எதிர்கொள்வார்? திமுகவின் கேடுகெட்ட நிர்வாகத்தால் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் ஒவ்வொரு நாளும் அதீத அச்சத்திலும், மன அழுத்தத்திலும் தவித்துக் கொண்டிருப்பது தான் “நாடு போற்றும் நல்லாட்சி”யின் லட்சணமா?
திமுக ஆட்சியில் பாலியல் வேட்டையாடப்பட்ட பெண் பிள்ளைகளின் உளக் காயங்களை “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற விளம்பர விழா மூலம் மூடி மறைத்து விட முடியுமா? திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசியல்வாதியாக அல்லாமல் உண்மையிலேயே “ஒரு அப்பா” ஸ்தானத்தில் இருந்து யோசித்துப் பார்த்தால், “திராவிட மாடல்” போன்றதொரு பெண்கள் விரோத அரசை அவர் மன்னிப்பாரா? என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ