Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 09 மார்ச் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சாலையில், புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் பிரபல எண்ணெய் ஆலை வளாகத்தில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான 'டயபர்' தயாரிக்கும் தொழிற்சாலையும் செயல்பட்டு வருகிறது.
இன்று காலை ஆலைக்கு வெளியே இருந்த மின்மாற்றி எதிர்பாராதவிதமாக வெடித்தது சிதறியது.
அப்போது அதிலிருந்து சிதறிய தீப்பொறிகள், டயபர் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பஞ்சுக் கிடங்கின் மீது விழுந்தன. இதில் கிடங்கில் இருந்த பஞ்சுகள் அனைத்தும் மளமளவெனத் தீப்பிடித்து எரியத் தொடங்கின.
சம்பவ இடத்திலிருந்த ஊழியர்கள் உடனடியாக மின்வாரியத்திற்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்தவுடன் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.
இதனால் மாநகர் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Hindusthan Samachar / vidya.b