Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 01 ஏப்ரல் (ஹி.ச.)
கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி புலியகுளம் விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தை துவக்கினார்.
அவர் மக்களிடையே நடந்து சென்று ஆதரவு திரட்டினார்.
அப்போது அவர் பேசிய செந்தில்பாலாஜி;-
இந்த 2026 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாடு அணிக்கும், டெல்லி அணிக்குமானது என முதல்வர் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் உதயசூரியன் உதிக்கும். நிச்சயமாக திமுக வெற்றி பெறும். கோவையில் அனைத்து தொகுதிகளிலும் உதயசூரியன் வெற்றி பெற வேண்டும். காலையில் கரூரில் நடைபெற்ற பிரசாரத்தின் போது ஏன் கரூரை விட்டு செல்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு கரூரும், கோவையும் இரண்டுமே எனது இரண்டு கண்கள் போல என பதில் அளித்துள்ளேன். கோவையில் பெரும் வெற்றி இந்நாள் மட்டுமல்ல எந்நாளும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். கோவை மாவட்டத்தில் தெற்கு தொகுதியை முதன்மைத் தொகுதியாக நிறைவேற்ற பாடுபடுவேன். அதற்காக பணியாற்றுவேன். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த செந்தில் பாலாஜி;-
முதல்வர் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார். மகத்தான வெற்றியை தலைவருக்கு சமர்ப்பிப்பேன். குறிப்பாக தெற்கு தொகுதியில் மகத்தான வெற்றியை சமர்ப்பிப்போம்.
திமுகவில் வாய்ப்பு கிடைக்காததற்கு யாரும் ஆதங்கம் பட வேண்டாம். வாய்ப்புகள் வழங்குவது குறித்து தலைவர்தான் முடிவு செய்வார். இந்த சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் வாக்கு எண்ணிக்கை நாளில் பொறுத்திருந்து பார்க்கலாம். நான் எந்த தொகுதியில் நிற்பது என முடிவெடுப்பது முதல்வர்தான். நான் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை.
கூட்டணி கட்சிகள் எந்த தொகுதியில் நிற்க வேண்டும். தலைமை தான் முடிவு எடுக்கும். கோவை தெற்கு தொகுதியில் இந்த முறை உதயசூரியன் வெற்றி பெறும். வரும் 2-ம் தேதி முதல்வர் கோவையில் 7 தொகுதிகளுக்கான பரப்புரையை மேற்கொள்கிறார்.
விஜயின் வாக்கு திமுகவின் வாக்கை சிதறடிக்குமா? என்ற கேள்விக்கு, எங்களது வாக்கு எங்களிடம் உள்ளது. மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
பிரச்சாரத்தின்போது, மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கணபதி ராஜ்குமார் எம்பி, மேயர் ரங்கநாயகி, திமுக தீர்மானக்குழு செயலாளர் நா.கார்த்திக், கூட்டணி கட்சி தலைவர்கள் மயூரா ஜெயக்குமார், ஆர்ஆர்.மோகன்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, ஒலம்பஸ், இராமநாதபுரம், நேருநகர், இராமலிங்கம் லே அவுட், பெருமாள் கோவில் வீதி, நஞ்சுண்டாபுரம் சாலை, சுப்பையன் லே அவுட், பாலாஜி நகர், சக்தி நகர், திருவள்ளுவர் உள்ளிட்ட பகுதிகளில், நடந்தே சென்று வாக்கு சேகரித்தார்.
Hindusthan Samachar / Durai.J