Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 01 ஏப்ரல் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தில் தற்போது பிசான சாகுபடிக்கான நெல் அறுவடையானது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வழக்கத்தை விட இந்த வருடம் நெல் விளைச்சல் நல்ல மகசூலை பெற்றுள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இருந்தபோதும், நெல் மகசூல் நன்றாக இருந்தும் அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்று வேதனை அடைகின்றனர் விவசாயிகள்.
குறிப்பாக, விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து உரிய காலத்திற்குள் நெல்மணிகளை கொள்முதல் செய்யாததால் ஏராளமான விவசாயிகள் சாலைகளில் நெல் மணிகளை குவியல், குவியலாக கொட்டி வைத்து காத்துக் கொண்டிருக்க அவல நிலையானது தற்போது ஏற்பட்டுள்ளது .
அதாவது, தென்காசி மாவட்டம் பண்பொழி பகுதியில் செயல்பட்டு வரும் இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மணிகளை கொள்முதல் செய்ய போதிய சாக்கு வசதிகள் இல்லை எனவும், இதற்கு முன்னதாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை இதுவரை எடுத்து செல்ல அதிகாரிகள் உத்தரவு போடாத காரணத்தினால் புதிதாக விவசாயிகளிடம் நெல்மணிகளை கொள்முதல் செய்ய முடியாத சூழல் நிலவுவதாகவும் கூறப்படும் நிலையில், இதன் காரணமாக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்தும் காணப்படுகின்றன.
மேலும், 10 முதல் 15 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை விற்பனை செய்ய முடியாத சூழலில் சாலையின் இருமருகிலும் நெல்மணிகளை கொட்டி வைத்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், அவ்வப்போது மழையும் பொழிவதால் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை உடனடியாக கொள்முதல் செய்ய அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN