Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 01 ஏப்ரல் (ஹி.ச)
தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்னும் சில மணி நேரங்களில் திருச்சியில் நடைபெற உள்ள பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ள நிலையில், அதற்கு முன்பாக ஒரு முக்கியமான வீடியோவை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
திருச்சியைச் சுற்றியுள்ள ஒரு சிறிய கிராமத்தில், நமது திராவிட மாடல் அரசு மேற்கொண்டுள்ள மாற்றங்களை இந்த வீடியோவில் காணலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள், குடிநீர், சாலை, கல்வி மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களை அந்த வீடியோ வெளிப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம்” என்று நான் கூறுவது வெறும் விளம்பர வாசகம் அல்ல. அது நமது அரசின் செயல்பாட்டை நிரூபிக்கும் உண்மை சாசனம் என முதலமைச்சர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார். நகர வளர்ச்சியுடன் சேர்த்து, கிராமங்களிலும் சமமான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே அரசின் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இன்று திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு செயல்படுத்திய திட்டங்கள், கிராமப்புற வளர்ச்சி மற்றும் அடுத்த கட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விரிவாக பேசுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் அரசு கொண்டு வந்த மாற்றங்களை எடுத்துக்காட்டி, மக்களிடம் ஆதரவு கோரவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்த வீடியோ வெளியீடு, பொதுக்கூட்டத்திற்கு முன்பாக மக்களிடம் நேரடியாக அரசின் சாதனைகளை கொண்டு செல்லும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ