Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.)
விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ஆன்லைனில் லீக்கானது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், 3 மணி நேரம் 2 நிமிடங்கள் ஓடும் ஜனநாயகன் படத்தை ஆன் லைனில் யாரோ திருடி வெளியிட்டுள்ளார்கள்.
அப்படத்தின் தயாரிப்பாளர் பார்வையில், இயக்குநரின் பார்வையில், இதில் பங்கேற்றிருப்பதால் துளிர்க்கக் காத்திருக்கும் பலரின் கனவுகளின் பார்வையில் இதைப் பார்க்க விரும்புகிறேன்.
சமீபத்தில் எனது நிறுவனத்தின் மூலமாக வெளியான சல்லியர்கள் படம் திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.
அதனால் ஏற்பட்ட வலி, இழப்பு இவற்றை சொல்ல முடியாது. அதன்பிறகு அதை அதிகாரப்பூர்வ தளங்களில் வெளியிட்டு சமன் செய்தோம்.
ஆனால் ஜனநாயகன் மிகப் பெரிய முதலீட்டுப் படம். அது திரையரங்குகளுக்கு குறித்த நேரத்தில் வராதிருந்ததே மிகப்பெரிய இழப்பை தயாரிப்பாளருக்கு ஏற்படுத்தியிருக்கும். அதையும் தாண்டி இப்போது திருட்டுத்தனமாக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்கள் என்றால் ஒட்டுமொத்த இழப்பையும் தயாரிப்பாளர் தாங்க வேண்டும் என்பது வேதனை.
இழப்பு மேல் இழப்பு. இயக்குநரின் உழைப்பு பலரின் கனவுகள் சிதைக்கப்பட்டிருக்கிறது. இது திரையுலகில் நடக்கக்கூடாத குற்றச் செயல். யாரோ ஒருவரின் உழைப்பு காசு பணத்தில் திருடுபவர்கள் சப்புக்கொட்டிக் கொள்வதை விடவே கூடாது.
யார் இந்த வேலையை செய்தது எனக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். திரையுலகிலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட வேண்டிய திருட்டுக் களைகள். உழைப்பைச் சுரண்டிக் கொழுப்பவர்கள் இனி அச் செயலை செய்யக்கூடாது என்ற எண்ணம் வருமளவிற்கு நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
திரையுலகினர் ஒற்றுமையுடன் இணைந்து இந்த இழிசெயலை செய்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN