Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டம் காரைக்குடியில் நடைபெற உள்ள நிலையில், நகரில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான விரிவான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபம் அருகே இந்த பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் இருப்பதால், அங்கு இயங்கும் மாநகரப் பேருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திருச்சி உள்ளிட்ட நீண்ட தூரப் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. மாநகரப் பேருந்துகள் தற்போது காரைக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
இந்த மாற்றம் காரணமாக, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சுமார் 800 மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகிலுள்ள மின்மாற்றி பகுதியை பொதுமக்கள் அணுகாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், விஜய் பேசும் மேடையை சுற்றி சுமார் 15 மீட்டர் தொலைவிற்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சாரக் கூட்டத்தை முன்னிட்டு, 100 தனியார் பாதுகாவலர்கள், 500 காவல்துறையினர் மற்றும் 200 தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
நகரம் முழுவதும் கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ