'கள்’ இறக்கும் உரிமையை மீட்க நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் - சீமான்
தென்காசி, 11 ஏப்ரல் (ஹி.ச.) தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பகுதியை சேர்ந்த பனை தொழிலாளி மணிகண்டன் பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வதாக கூறி கடந்த ஏப்ரல் 7-ம் தேதி சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா வாக்குவாதத்தில் ஈடுப
'கள்’ இறக்கும் உரிமையை மீட்க நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் - சீமான்


தென்காசி, 11 ஏப்ரல் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பகுதியை சேர்ந்த பனை தொழிலாளி மணிகண்டன் பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வதாக கூறி கடந்த ஏப்ரல் 7-ம் தேதி சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பனை தொழிலாளியை சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆலங்குளம் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் மணிகண்டன் பெற்றோர் தங்கள் மகனுக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி கண்ணீர் மல்க அவர்கள் வேதனையை தெரிவித்தனர்.

இது தொடர்பாக சீமான் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜாவால் சிறிதும் மனிதத்தன்மையற்று துப்பாக்கியால் சுடப்பட்ட தம்பி மணிகண்டனின் உடல்நிலை கண்டு பெருந்துயருற்றுள்ள தம்பியின் பெற்றோர் ஆலங்குளத்தில் பரப்புரைக் கூட்டத்திற்கு வந்து தங்கள் வேதனையைத் தெரிவித்தனர்.

சங்க காலம் தொட்டுத் தமிழ் மக்களின் பயன்பாட்டில் உள்ள ‘கள்’ இறக்கும் உரிமையை மீட்கவும், பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும், தம்பி மணிகண்டனுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தரவும் இறுதிவரை நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என உறுதியளித்து ஆறுதல் தெரிவித்தேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b