Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 11 ஏப்ரல் (ஹி.ச)
தூத்துக்குடி மாநகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட சங்கரப்பேரி பகுதியில், வழக்கமாக 3 நாட்களுக்கு ஒருமுறை இயங்கி வந்த குடிநீர் விநியோகம் கடந்த சில தினங்களுக்கு முன் மோட்டார் பழுதானதால், கடந்த 10 நாட்களாக பாதிக்கப்பட்டது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், இன்று காலை 9 மணியளவில் சங்கரப்பேரி கிராமப் பொருளாளர் பெரியசாமி தலைமையில் போராட்டத்தில் இறங்கினர். சுமார் 50 பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில், மாப்பிள்ளையூரணி விலக்கு அருகே நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இந்தத் திடீர் மறியல் போராட்டத்தால் தூத்துக்குடியிலிருந்து மதுரை, கோவில்பட்டி, விருதுநகர் வழியாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றன.
சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல் ஆய்வாளர் தனசேகரன், உதவி ஆய்வாளர்கள் முத்துமாலை, சண்முக பாலன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகத் தீர்வு ஏற்படவில்லை.
தகவலறிந்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர், அடுத்த 10 நாட்களுக்குள் பழுதான மோட்டார் முழுமையாகச் சரிசெய்யப்பட்டு குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படும். அதுவரை லாரிகள் மூலம் தங்குதடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
மேயரின் இந்த உறுதியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Hindusthan Samachar / vidya.b