Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 11 ஏப்ரல் (ஹி.ச.)
புதுச்சேரி வில்லியனூரில் மிகவும் பழமைவாய்ந்த தூய லூர்து அன்னை
திருத்தலத்தின் 149-வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு
மாதாவை வழிபட்டு சென்றனர்.
புதுச்சேரி வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்து அன்னை திருத்தலம் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். பிரான்ஸ் நாட்டின் லூர்து நகருக்கு அடுத்து உலகிலேயே
லூர்து மாதாவிற்கென கட்டப்பட்ட 2-வது ஆலயம் வில்லியனூர் மாதா ஆலயமாகும்.
அதுமட்டுமல்லாது ஆசிய கண்டத்திலேயே தமிழர் பண்பாட்டின் படி ஆலயத்தின் எதிரே
குளம் அமைந்திருப்பது இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு ஆகும்.
இந்த ஆலயத்தில்
ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிவடைந்த வாரத்தில் சனிக்கிழமை அன்று ஆண்டு
விழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். அதன்படி 149-ம் ஆண்டாக இந்த ஆண்டிற்கான பெருவிழா இன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி காலை 5.30
மணிக்கு அருள்நிறை தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் கூட்டு
திருப்பலி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து லூர்து அன்னையின் உருவம் தாங்கிய
திருக்கொடி மாதா குளத்தை சுற்றி பவனி வந்தது.
தொடர்ந்து ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் பெருவிழா கொடியேற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள்
தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர்.
திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, நவநாள்
மற்றும் சிறிய தேர்பவனி நிகழ்ச்சிகள் 9 நாட்கள் நடைபெற உள்ளன.
மேலும் ஏப்ரல் 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட
பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற உள்ளது.
அன்று இரவு 7.30 மணிக்கு வேலூர் மறைமாவட்ட ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து
தலைமையில் திருப்பலி நடைபெற்று, ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக மாதாவுக்கு வைர கிரீடம் பொருத்தப்பட்டு ஆடம்பர தேர் பவனி நடைபெறுகிறது.
ஆண்டு பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல தந்தையர்கள் ஆல்பர்ட், ஆல்வின்
அன்பரசு, தோமினிக். சாவியோ, அலெக்சிஸ் ஆகியோர் தலைமையில், விழா குழுவினர்
மற்றும் வில்லியனூர் பங்கு இறை மக்கள் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam