Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 11 ஏப்ரல் (ஹி.ச.)
குடிநீர் வேண்டிப் போராடிய மக்களை அவதூறாகப் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலரைக் கண்டித்தும், அங்கன்வாடி கட்டிட விவகாரத்தில் முறைகேடு நடப்பதாகக் குற்றம் சாட்டியும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக ஆழ்வார்தோப்பு கிராம மக்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீபரங்குசநல்லூர் - ஆழ்வார்தோப்பு பகுதியில் நீண்ட நாட்களாகக் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இது குறித்து முறையிடச் சென்ற பொதுமக்களை, வட்டார வளர்ச்சி அலுவலர் கிறிஸ்டோபர் தாசன் என்பவர் ஒருமையில் பேசியதோடு, சாக்கடையைக் குடியுங்கள் என மிகவும் இழிவாகப் பேசியதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், இப்பகுதியில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் ரூ.17 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், அந்தப் பகுதியில் போதிய மாணவர்கள் இல்லாத சூழலில், இக்கட்டிடத்தைச் சர்ச் நிர்வாகத்திடம் தாரைவார்க்க அதிகாரிகள் முயன்று வருவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாகப் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
அரசு மற்றும் அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்து, ஆழ்வார்தோப்பு கிராம மக்கள் ஒன்றிணைந்து ஒருமித்த முடிவை எடுத்துள்ளனர்.
எங்கள் கோரிக்கைகளை மதிக்காத அதிகாரிகளைக் கண்டித்தும், தீர்வுகாணாத அரசை எதிர்த்தும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறோம் எனும் வாசகத்துடன் ஊர் மக்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் தற்போது சமூக வலைதளங்களிலும் அப்பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b