Enter your Email Address to subscribe to our newsletters

விசாகப்பட்டினம் , 12 ஏப்ரல் (ஹி.ச.)
உலகப் புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஐபிஎம் (IBM) ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் தனது செயல்பாடுகளை மீண்டும் தொடங்க உள்ளது.
இது குறித்து மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறை அமைச்சர் நாரா லோகேஷ்,
தனது சமூக வலைதளப் பக்கத்தில் விசாகத்தில் உள்ள ஐபிஎம் நிறுவனத்தின் பெயர் பலகை புகைப்படத்தை பகிர்ந்து, நிறுவனத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சுமார் ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎம் மீண்டும் விசாகத்திற்கு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்காக நிறுவனம் இந்திய அரசின் சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆஃப் இந்தியா (STPI) மூலம் தனது செயல்பாடுகளை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக இந்த மையம் மூலம் 500க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும், வரும் மூன்று ஆண்டுகளில் சுமார் ரூ.321 கோடி மதிப்பிலான ஏற்றுமதியை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாநிலத்தை தொழில்நுட்ப மையமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஜனவரியில் டாவோசில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோர் ஐபிஎம் தலைமை நிர்வாக அதிகாரியை சந்தித்து முதலீட்டு வாய்ப்புகளை எடுத்துரைத்திருந்தனர்.
முன்னதாக மதுரவாடா ஐடி செஸில் ஐபிஎம் அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் விசாகப்பட்டினத்தில் செயல்பாடுகள் தொடங்குவது நகரத்தின் ஐடி வளர்ச்சிக்கு பெரிய ஊக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA