Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, 75 ஆயிரத்து 97 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்காளர் தகவல் சீட்டுகள் (பூத் சிலிப்) வழங்கும் பணி இன்று முதல் (ஏப்ரல் 12) தொடங்கியது.
வாக்காளர் தகவல் சீட்டு அச்சிடப்பட்டு, இன்று முதல் வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிக்க விரிவான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்களில் பெரும்பாலானோருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அதில் வரிசை எண் மற்றும் பாகம் எண் வழக்கத்தைவிட இம்முறை பெரிதாக அச்சிடப்பட்டுள்ளது.
அதனுடன் க்யூ ஆர் குறியீடும் இடம்பெற்றிருக்கும்.
வாக்குப் பதிவுக்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக வரும் 17-ஆம் தேதிக்கு முன்பாக அனைத்து வாக்காளர்களுக்கும் தகவல் சீட்டுகளை விநியோகித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பூத் சிலிப்பை வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாகப் பயன்படுத்த இயலாது.
வாக்காளர் அடையாள அட்டை அல்லது அதற்கு மாற்றாக ஆதார் உள்பட 12 ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b