Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 12 ஏப்ரல் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், இன்று ஞாயிறு வார விடுமுறை மற்றும் சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யக் குவிந்துள்ளனர்.
இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளனர்.
இதனால் அடிவாரம், கிரிவீதி, சன்னதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் எங்குப் பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமே காணப்படுகிறது.
பக்தர்கள் கிரிவலப் பாதையில் தீர்த்தக் குடம் எடுத்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகின்றனர்.
மலைக்கோவிலுக்குச் செல்லக் கூடிய ரோப் கார் மற்றும் வின்ச் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுவதால், பக்தர்கள் படிபாதை மற்றும் யானைப்பாதை வழியாகச் சென்று தரிசனம் செய்யுமாறு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, பக்தர்கள் மலைக்கோவிலுக்குச் செல்ல குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், தரிசனம் முடித்துத் திரும்பப் படிப்பாதை வழியாகவும் செல்லுமாறு வழித்தட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், பொதுத் தரிசன வரிசையில் சாமி தரிசனம் செய்யக் குறைந்தபட்சம் 3 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளைக் கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN