Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 12 ஏப்ரல் (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம் கோவிந்தராஜ புரத்தில், தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.பி.தமிழ்ச்செல்வியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர்,
ஈரோடு மாவட்டத்தில் 18% பேருக்கு புற்றுநோய் இருப்பதாகக் கூறுகிறார்கள். அதையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால், புரட்சியை உருவாக்க வேண்டும். அந்த புரட்சிதான் தமிழக வெற்றிக் கழகம். எனவே, தவெக தலைவர் தளபதிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் எனப் பேசிய அவர், திடீரென சுதாரித்துக் கொண்டார்.
உடனேயே, நான் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டுக் கேட்டு பழகிவிட்டேன். அதுவும், நான் ஓட்டு கேட்கப் போகும்போது, பெண்கள் இரட்டை இலை தானே என்றார்கள். அப்போது, அம்மா நான் விசில் சின்னத்தில் நிற்கிறேன்.
ஆகையால், விசில் சின்னத்திற்கே.. என கூறியதும், அவர்களும் விசிலுக்கு ஓட்டுப் போடுகிறேன் என்று சொன்னார். மேலும், அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என ஆகியோரிடம் விஜய்க்கு ஓட்டு போட்டால் தான் சாப்பிடுவேன் என்று சொல்லுங்கள். அது உங்கள் கடமை” என சமாளித்தார்.
ஜனநாயகன் வீடியோ லீக் குறித்து பேசிய அவர்,
விஜய்க்கு எத்தனையோ சோதனை. சிபிஐ மூலமாக நெருக்கடி, அவரது கூட்டத்துக்கு மட்டும் யாருக்கும் இல்லாத அளவு 51 விதிகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகன் திரைப்படம் இணையதளத்தில் லீக் ஆவதற்கு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தான் காரணம். சென்சார் தர முடியாத நிலையில், படம் எப்படி லீக்கானது? என கேள்வியெழுப்பினார்.
மேலும் பேசிய அவர், ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றில் சாயக்கழிவு கலப்பதால் 18% மக்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.
நடப்பு மற்றும் முன்னாள் அமைச்சர்கள் காலையில் சாய ஆடைகளை மூடச் சொல்வார்கள், மாலையில் திறக்கச் சொல்வார்கள். எந்த உத்தரவாதமும் கிடையாது என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN