கோவையில் சிக்கியது ரூ.8000 மதிப்பு உள்ள தி.மு.க டோக்கன்கள் - பறக்கும் படை அதிரடி ரெய்டு
கோவை , 13 ஏப்ரல் (ஹி.ச.) கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ரத்தினபுரி பகுதியில், வாக்காளர்களுக்குப் பணத்திற்குப் பதிலாக 8,000 ரூபாய் மதிப்பிலான டோக்கன்களை விநியோகித்த தி.மு.க-வினரை அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் கையும் களவுமாகப் பிடித
C


கோவை , 13 ஏப்ரல் (ஹி.ச.)

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ரத்தினபுரி பகுதியில், வாக்காளர்களுக்குப் பணத்திற்குப் பதிலாக 8,000 ரூபாய் மதிப்பிலான டோக்கன்களை விநியோகித்த தி.மு.க-வினரை அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் கையும் களவுமாகப் பிடித்து உள்ளனர்.

காந்திபுரம் ஏழாவது வீதி பகுதியில் உள்ள ஒரு தனியார் கணினி மையத்தில் வைத்து, இந்த 'டோக்கன் ரகசியமாக விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் எதிர்த்தரப்பினர் அங்கு திரண்டு முற்றுகையிட்டனர்.

இதனால் அந்தப் பகுதியே பரபரப்பில் ஆழ்ந்தது.

'கரூர் கும்பல்' என அழைக்கப்படும் தி.மு.க-வின் ஒரு தரப்பினர் இந்தச் சட்ட விரோதப் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

கணினி மையத்திற்குள் புகுந்த அ.தி.மு.க-வினர், அங்கு இருந்தவர்களைத் தப்பவிடாமல் மடக்கிப் பிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், அங்கு இருந்த வாக்காளர் பட்டியல் மற்றும் கட்டுக் கட்டாக இருந்த 8,000 ரூபாய் டோக்கன்களைப் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இதனை அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களாகப் பதிவு செய்தனர். ஆனால், பணப் பட்டுவாடா ஆதாரங்கள் வெளியே கசிவதைத் தடுக்கும் நோக்கில், அங்கு இருந்த காவல் துறையினர் வீடியோ எடுத்தவர்களைக் கடுமையாக மிரட்டித் தடுத்ததாகப் குற்றம் சாட்டிய அவர்கள்,

தேர்தல் விதிமுறைகளை மீறி டோக்கன் முறையில் ஊழல் செய்ய முயன்ற இந்தச் சம்பவம் கோவை தெற்கு தொகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA