Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 13 ஏப்ரல் (ஹி.ச.)
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிடி, மல்லாபுரம் பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறப் பகுதியில் கிரண் என்பவர் வசித்து வருகிறார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த அவர், தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இவர் தனியாக வசித்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான ஹைதராபாத்திற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில், இரவு வீடு திரும்பிய போது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கு வைத்திருந்த ரூ.1.5 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனுடன், வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் காணாமல் போனதும் கண்டறியப்பட்டது.
வீடு காலியாக இருந்ததை முன்னரே கண்காணித்து, மர்ம நபர்கள் இந்த திருட்டு மற்றும் கார் கொள்ளையை திட்டமிட்டு செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து கிரண், பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அருகிலுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, சந்தேக நபர்களை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN