ராமதாஸிடம் உடல்நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக ராமதாஸ் தரப்பு நன்றி தெரிவிப்பு
சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச.) சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அணி சார்பில், சிட்டிங் எம்எல்ஏ அருள் 2வது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். இதையடுத்து, அவரை ஆதரித்து பிரசார கூட்டம், சேலம் பள்ளப்பட்டியில
ஹி.ச


சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச.)

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அணி சார்பில், சிட்டிங் எம்எல்ஏ அருள் 2வது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார்.

இதையடுத்து, அவரை ஆதரித்து பிரசார கூட்டம், சேலம் பள்ளப்பட்டியில் நேற்றிரவு நடைபெற்றது.

இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, கடந்த 5 ஆண்டுகளாக அருள் எம்எல்ஏ, தொகுதி மக்களுக்கு செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேசிய அவர், மீண்டும் அவரை எம்எல்ஏவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, கூட்டம் முடிந்ததும் ராமதாஸ் தனது மகள் ஸ்ரீகாந்தி மற்றும் உதவியாளர்கள் உதவியுடன், மேடையிலிருந்து கீழே இறங்க முயன்றார்.

மேடையின் சாய்தள பகுதிக்கு வந்த அவர், திடீரென மயங்கி சரிந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உதவியாளர்கள், அவரை தாங்கி பிடித்தனர்.

ஆனால், அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. இதையடுத்து, உடனடியாக அவரை தூக்கி கொண்டு, ஆம்புலன்சில் ஏற்றி காந்திரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதனால், கூட்டத்தில் இருந்த பாமகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் சிகிச்சையில் உள்ள ராமதாஸிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக ராமதாஸ் தரப்பு நன்றி தெரிவித்துள்ளது.

பா.ம.க. தலைமை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

சேலத்தில் நேற்று பிரசாரம் மேற்கொண்டு இருந்தபோது பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டாக்டர் ராமதாசின் உடல்நிலை குறித்து முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

மேலும், டாக்டர் ராமதாஸ் விரைந்து பூரண குணமாக வேண்டும் என்றும், குணமாகி வருவதை கண்டு மகிழ்ச்சி கொள்வதாகவும் தெரிவித்தார். தனது உடல் நலனில் அக்கறை கொண்டு பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி தெரிவித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராமதாஸ் சேலம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b