Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 13 ஏப்ரல் (ஹி.ச.)
சமூக வலைதளங்களில் தன்னை குறிவைத்து பரவி வரும் அவதூறு பிரச்சாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட தெலுங்கானா மாநில அமைச்சர் சீதக்கா, பி.ஆர்.எஸ். தலைவர் கே. சந்திரசேகர ராவ்க்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு மொபைல் போன்கள் வழங்கிய விவகாரத்தில் பி.ஆர்.எஸ். சமூக ஊடக பிரிவு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அவை தனது கண்ணியத்தை குலைக்கும் வகையில் உள்ளன என்றும் சீதக்கா தெரிவித்தார்.
கட்சித் தலைவராக இந்த பிரச்சாரத்திற்கு கே.சி.ஆரே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாநிலம் முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அரசு சார்பில் மொபைல் போன்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், ஒவ்வொரு போனும் சந்தை விலையை விட அதிகமாக வாங்கப்பட்டு அமைச்சர் கமிஷன் பெற்றதாக பி.ஆர்.எஸ். தரப்பில் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டன.
இதற்கு பதிலளித்த சீதக்கா, ஒவ்வொரு போனும் ரூ.11,650க்கு முழு வெளிப்படைத்தன்மையுடன் வாங்கப்பட்டதாக விளக்கம் அளித்தார்.
தவறான தகவல்களை பரப்பி மக்களை தவறாக வழிநடத்த முயற்சி நடைபெறுகிறது எனவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து, தவறான குற்றச்சாட்டுகள் உள்ள சமூக வலைதள பதிவுகளை 48 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என நோட்டீஸில் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், தனது கண்ணியத்திற்கு சேதம் விளைவித்ததற்காக கே.சி.ஆர் பொதுமக்கள் முன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்கவில்லை என்றால் சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA