Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 14 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் நேற்று 12 இடங்களில் வெயில் சதம் அடித்த நிலையில், உள் மாவட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமை வரை வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் வாட்டியது. வேலூர் மற்றும் ஈரோட்டில் 104 டிகிரி ஃபாரன்ஹீட், மதுரை விமான நிலையம், நாமக்கல் மற்றும் திருப்பத்தூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
கோவை, மதுரை நகரம், சேலம் மற்றும் தருமபுரியில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், பாளையங்கோட்டை, திருச்சியில் நூறு டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமை வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடும் என கணித்துள்ளது.
அதிக வெப்பநிலையும் மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக கடலோர தமிழகத்தின் சில பகுதிகளில் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம் என அறிவுறுத்தியுள்ளது.சென்னை மற்றும் புறநகரில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, வட கிழக்கு பிகார் முதல் தென் தமிழகம் வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதால்,வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P