Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 14 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதற்காக அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் போன்ற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நாளை தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக பிரதமர் மோடி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
நாளை டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்படும் அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சென்றடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார்.
அதை தொடர்ந்து வேப்பமூடு சந்திப்பிலிருந்து எம்ஜிஆர் சிலை வரை சாலை மார்க்கமாக தொண்டர்களையும் பொது மக்களையும் சந்தித்து வாக்கு சேகரித்த வண்ணம் ரோடு ஷோ செல்ல உள்ளார்.
இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சாலை மார்க்கமாக செல்லும் பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர பாதுகாப்பு சோதனை ஆனது நடைபெற்று வருகிறது.
நாளை மோடி வருவதை முன்னிட்டு சாலை மார்க்கமாக செல்லும் பகுதியில் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வருகையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை டிரோன்கள் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P