Enter your Email Address to subscribe to our newsletters

தலச்சேரி, 15 ஏப்ரல் (ஹி.ச.)
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் வாகனச் சோதனையின்போது காரின் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.2.65 கோடி ரொக்கப் பணத்தை இன்று கேரள போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பெரிங்கத்தூரைச் சேர்ந்த அஜ்மல் கே மற்றும் புளியனாம்பத்தைச் சேர்ந்த ஓ.பி. சாபித் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தலச்சேரி நகர காவல் நிலைய ஆய்வாளர் கைலாஸ்நாத் எஸ்.பி. தெரிவித்ததாவது:
தலச்சேரி ஏ.எஸ்.பி. நந்தகோபன் எம். அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இன்று அதிகாலை சுமார் 3:40 மணியளவில், கர்நாடகாவில் இருந்து வந்த கண்ணூர் பதிவு எண் கொண்ட ஹூண்டாய் வென்யூ காரை அதிகாரிகள் மறித்து சோதனையிட்டனர்.
சோதனையின்போது, ஓட்டுநர் இருக்கைக்கும் பின் இருக்கைக்கும் இடையே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரகசிய அறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த மறைவிடத்தில் ரூ.500 மற்றும் ரூ.200 நோட்டுக் கட்டுகளாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் ரூ.2.65 கோடி ரொக்கம் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 112-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்பணம் எங்கிருந்து எடுக்கப்பட்டது, அதைக் கொண்டு செல்லவிருந்த இடம் மற்றும் இதன் பின்னணியில் பெரிய கும்பல் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கணக்கில் வராத பணம் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து, எல்லைப் பகுதிகளில் சோதனையை தீவிரப்படுத்தவும் கேரள போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b