Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 15 ஏப்ரல் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்ட அதிமுக தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளராக இருக்கும் ஹரிஷ் பாலாஜி திருவள்ளூர் நகராட்சி வி.எம்.நகரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது இல்லத்தில் நேற்று (14.04.2026) குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு 01:30 மணி அளவில் ஜன்னல் கண்ணாடிகள் உடையும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக எழுந்து பார்த்தபோது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் முகமூடி அணிந்து வந்ததில் ஒருவர் இறங்கி கையில் வைத்திருந்த கற்களைக் கொண்டு அவரது வீட்டில் சரமாரியாக தாக்கியது தெரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா நேரில் சென்று விசாரணை செய்தார். நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த நபர் ஒருவர் இறங்கி, கல்லை எடுத்து வீசும் காட்சி சிசிடிவியில் பதிவாகியிருப்பதை பார்வையிட்டார்.
திமுக வேட்பாளர் வி.ஜி. ராஜேந்திரனின் தூண்டுதலாலேயே இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இது குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறை இடையே புகார் அளிக்கப்போவதாகவும் வேட்பாளர் பி.வி.ரமணா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b