Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச)
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திமுக வேட்பாளர் கதிரவன் ஆதரவாளர்கள் பிச்சாண்டார் கோவில் ஊராட்சி பகுதியில் வசித்து வந்த 25 வயதான சிந்துஜா என்ற இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசி தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தால் மனமுடைந்த சிந்துஜா தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகம் முழுவதும் தேர்தல் நடைமுறைகளுக்கு விரோதமாக திமுகவினர் கூப்பன் வழங்கி மக்களை ஏமாற்றி வருவதாகவும், அதில் தமக்கு கூப்பன் வழங்கப்படவில்லை என்று கேட்டதற்காகவே சிந்துஜா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது திமுகவின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவதாகவும், வாக்காளர்களுக்கு மரியாதை இல்லாத அணுகுமுறையின் வெளிப்பாடாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
தேர்தல் நடைபெறும் சூழலிலும் பெண்களை பொருட்படுத்தாமல் தாக்குதல் நடத்தி ஒரு உயிரிழப்புக்கு காரணமாக இருப்பதாக குற்றம்சாட்டிய அவர், தேர்தல் முடிந்த பிறகு இத்தகைய செயல்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் மக்கள் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ