Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 15 ஏப்ரல் (ஹி.ச.)
பீகார் முதலமைச்சராக இருந்து வந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான நிதிஷ் குமார், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக பணியாற்ற வேண்டும் என்ற தனது நீண்டகால விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, மார்ச் 30-ந் தேதியன்று பீகார் சட்ட மேலவை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் விலகினார்.
முன்னதாக, அவர் மார்ச் 17-ந் தேதியன்று நடைபெற்ற தேர்தலில், மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வானார். சமீபத்தில் அவர் மாநிலங்களவை எம்.பி.யாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவர் தனது முதலமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். பீகார் மாநில ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைனை நேரில் சந்தித்த நிதிஷ் குமார் நேற்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
பீகாரின் புதிய முதலமைச்சராக சாம்ராட் சவுத்ரியை தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்தனர். இதையடுத்து, சாம்ராட் சவுத்ரி இன்று முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு ஆளுநர் சையத் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த இருவர் துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்று கொண்டனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P