Enter your Email Address to subscribe to our newsletters

சத்தீஸ்கர் , 15 ஏப்ரல் (ஹி.ச.)
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கொதிகலன் வெடிப்பு விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரின் சக்தி மாவட்டம் சிங்கிதாரி கிராமத்தில் செயல்பட்டு வரும் வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று திடீரென கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டது.
வெடிப்பு மிகுந்த அதிர்வுடன் ஏற்பட்டதால், ஆலைக்குள் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் பலர் சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்து குறித்து சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்திற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும், அலட்சியம் கண்டறியப்பட்டால் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொழிற்சாலை பாதுகாப்பு நடைமுறைகள் மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA