Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச)
அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டம் குறித்து கடந்த ஒரு வாரமாகத் தெரிவித்துவந்த தனது அச்சம் தற்போது உண்மையாகி வருவதாக, மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மக்களவையில் தமிழ்நாட்டின் தற்போதைய உறுப்பினர் எண்ணிக்கை 39 ஆக உள்ள நிலையில், அது 58 ஆக உயரும் என கூறப்பட்டதாகவும், ஆனால் அது உண்மையில் நிகழாத மாயை என தாம் முன்பே எச்சரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தொகுதி மறுவரையறை நடைமுறைக்கு வந்தால், 58 ஆக உயருமென கூறப்படும் எண்ணிக்கை பின்னர் 46 ஆக குறையக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், உத்தரப் பிரதேசத்தின் தற்போதைய மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 80 ஆக இருந்து, முதலில் 120 ஆக உயரும் என்றும், அதன் பின்னர் தொகுதி மறுவரையறைக்கு பின் சுமார் 140 ஆக மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் தற்போதைய மக்களவை பிரதிநித்துவம் 24.3 சதவீதமாக உள்ள நிலையில், அது 20.7 சதவீதமாக குறையும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனால், மக்களவையில் தென் மாநிலங்களின் குரல் ஒடுக்கப்படும் சூழல் உருவாகும் என்றும் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ