Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.)
மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543-இலிருந்து 850 ஆக உயர்த்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு
(131ஆவது திருத்தம்) மசோதா, 2026’ குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நாளை தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில், மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அவர் வரவேற்றுள்ளார். அதேவேளை, மக்களவை தொகுதி எண்ணிக்கை அதிகரிப்பு தொடர்பான திருத்த மசோதா தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தென் மாநிலங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் இடையிலான பிரதிநிதித்துவ விகிதாசார வேறுபாடு அதிகரிக்கும். இதனால் மொழி, கலாசாரம், மாநில உரிமைகள் போன்ற முக்கிய அம்சங்களில் தென் மாநிலங்களின் குரல் குறையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒன்றிய அரசின் கொள்கைகளை முறையாகக் கடைப்பிடித்து வந்த மாநிலங்களுக்கு இது “தண்டனை” போன்றதாகவும், அவற்றைப் பின்பற்றாத மாநிலங்களுக்கு “வெகுமதி” அளிப்பதுபோலவும் அமையும் என விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டால், நிதி பகிர்விலும் தாக்கம் இருக்கும். ஏற்கனவே தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நிதி ஒதுக்கீட்டில் இழப்பை சந்தித்து வருவதாக மாநில அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில், புதிய மசோதா அந்த பாதிப்பை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் விஜய் எச்சரித்துள்ளார்.
எனவே, அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேற்றும் முயற்சியை கைவிட்டு, தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த கருத்துகளை அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ