Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச)
சென்னையில் இன்று நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தனது அரசியல் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ள நிலையில், அவருக்கு காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விஜய் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து பிரச்சாரத்திற்காக கிளம்பும் தருணம் முதல், நிகழ்ச்சி நிறைவடைந்து மீண்டும் வீடு திரும்பும் வரை பாதுகாப்பு வழங்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, நான்கு பேட்ரோல் வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் முழு நேரமும் விஜயின் வாகன அணிவகுப்பைச் சுற்றி பாதுகாப்பு வளையமாகச் செயல்படும்.
மேலும், ஒவ்வொரு பேட்ரோல் வாகனத்திலும் ஆயுதம் ஏந்திய போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விஜய் இல்லம் அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அந்தப்பகுதியில் வாகன சோதனை, பொதுமக்கள் கண்காணிப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரச்சார நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலும் காவல்துறை தனிப்படை, போக்குவரத்து போலீசார், உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து கண்காணிப்பு மேற்கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் அதிக அளவில் திரளக்கூடும் என்பதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும்,எந்தவித அவசர சூழ்நிலைகளையும் சமாளிக்க காவல்துறை முழுமையாக தயாராக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ