சொத்து விவரங்கள் மறைப்பு குற்றச்சாட்டு - ஆதவ் அர்ஜுனா மீது உயர்நீதிமன்றத்தில் மனு
சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச.) தேர்தல் வேட்பு மனுவில் முக்கியமான சொத்து விவரங்களை மறைத்ததாக தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா மீது கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது சட்ட ரீதியான பரிமாணத்தை எட்டியுள்ளது. வில்லிவாக்கம் தொகுதியைச்
Aadhav Arjuna


சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச.)

தேர்தல் வேட்பு மனுவில் முக்கியமான சொத்து விவரங்களை மறைத்ததாக தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா மீது கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தற்போது சட்ட ரீதியான பரிமாணத்தை எட்டியுள்ளது.

வில்லிவாக்கம் தொகுதியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஜி தேவராஜன், இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம்த்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஆதவ் அர்ஜுனா தனது தேர்தல் வேட்பு மனுவில், சட்டப்படி குறிப்பிட வேண்டிய அனைத்து சொத்து விவரங்களையும் முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்ஸிக்கு சொந்தமான சொத்துக்கள் பற்றிய விவரங்கள் வேட்புமனுவில் இடம்பெறவில்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார். பல்வேறு நிறுவனங்களில் இயக்குநராக உள்ள அவரது மனைவியின் சொத்து விவரங்களை மறைத்திருப்பது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வேட்புமனு பரிசீலனையின் போது தேர்தல் அதிகாரியிடம் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததாகவும், ஆனால் அதனை சரியாக ஆய்வு செய்யாமல் அதிகாரிகள் நிராகரித்துவிட்டதாகவும் ஜி தேவராஜன் தெரிவித்துள்ளார்.

இதனால், தனது புகாரை நிராகரித்து தேர்தல் அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முழுமையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை விரைவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

தேர்தல் காலகட்டத்தில் இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ