மாநிலங்களவை எம்.பி.க்களாக 16 பேர் இன்று பதவியேற்பு
புதுடெல்லி , 16 ஏப்ரல் (ஹி.ச.) 3 நாட்கள் நடைபெறும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்ற அலுவல்கள் தொடங்கப்பட்டன. இதனைத்
D


புதுடெல்லி , 16 ஏப்ரல் (ஹி.ச.)

3 நாட்கள் நடைபெறும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.

கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

பின்னர் நாடாளுமன்ற அலுவல்கள் தொடங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்றனர்.

இந்திய துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை சபாநாயகருமான சி.பி. ராதாகிருஷ்ணன், அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இன்று மொத்தம் 16 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

இவர்களில் பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய மந்திரி ராம் நாத் தாக்கூர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோர் அடங்குவர்.

பதவியேற்ற 16 பேரில் 8 பேர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள். மேலும் 3 பேர் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக பதவியேற்றவர்கள் விவரம் வருமாறு:

பீகார் மாநிலத்திலிருந்து நிதின் நபின், ராம் நாத் தாக்கூர் (இருவரும் பா.ஜ.க.), அசாம் மாநிலத்திலிருந்து தெராஷ் கோவல்லா, ஜோகன் மோகன் (பா.ஜ.க.), பிரமோத் போரோ (UPP-L),

சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து லட்சுமி வர்மா (பா.ஜ.க.), பூலோ தேவி நேதம் (காங்கிரஸ்), அரியானா மாநிலத்திலிருந்து கரம்வீர் சிங் பவுத் (காங்கிரஸ்), சஞ்சய் பாட்டியா (பா.ஜ.க.),

தெலங்கானா மாநிலத்திலிருந்து அபிஷேக் மனு சிங்வி, வேம் நரேந்திர ரெட்டி (காங்கிரஸ்), ஒடிசா மாநிலத்திலிருந்து சுஜீத் குமார் (பா.ஜ.க.), இமாச்சலப் பிரதேச மாநிலத்திலிருந்து அனுராக் சர்மா (காங்கிரஸ்) ஆகியோர் பதவியேற்றனர்.

பா.ஜ.க. தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பீகார் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிதின் நபின், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.

மேலும் ராம் நாத் தாக்கூர் பீகாரிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றதும் குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA