Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச)
துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் சேகர்பாபு, தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஸ்டான்லி மருத்துவமனை அருகில் அமைந்துள்ள 776 வீடுகள் கொண்ட முதல்வர் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவரை வரவேற்கும் விதமாக அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும், பூக்கள் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பில் அவர் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
இந்த குடியிருப்புகள் ரூ.147 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளதாகவும், சென்னையில் இதுபோன்ற வசதிகளுடன் கூடிய குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் வேறு எங்கும் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், இங்கு வசிக்கும் மக்களிடம் ஒரு ரூபாய் கூட வாடகை வசூலிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
இந்த குடியிருப்புகள் கட்சி அல்லது ஜாதி பாராமல் வழங்கப்பட்டுள்ளதாகவும், உணவுப்பொருள் கடை, நியாய விலை கடை, மருத்துவமனை, அங்கன்வாடி, பூங்கா, படிப்பகம் மற்றும் ஆண்கள்-பெண்களுக்கு தனித்தனியான உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஒரே வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
மேலும், துறைமுகம் தொகுதியில் சாலையோரம் யாரும் வசிக்காத நிலையை உருவாக்குவது தான் இலக்கு என்றும், தற்போது விடுபட்டவர்களின் மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு, மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மேலும் 3,000 வீடுகள் கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த திட்டங்கள் தொடர வேண்டுமெனில், மக்கள் மனசாட்சியுடன் “உதயசூரியன்” சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும், தவறான முடிவெடுத்தால் மக்களின் நிம்மதி பாதிக்கப்படும் என்றும் சேகர்பாபு வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / P YUVARAJ