Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 16 ஏப்ரல் (ஹி ச.)
திருச்சியில் திமுக வேட்பாளர் வழங்கிய பாத்திரத்தை பெற்ற சிந்துஜா என்ற பெண்ணை அருவருப்பாக கேலி செய்து, ஆபாசமாக சித்தரித்து விமர்சித்ததை எதிர்த்து அவர் கேள்வி எழுப்பிய நிலையில், அவரை துடைப்பத்தால் தாக்கி மானபங்கப்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அவமானத்தை தாங்க முடியாமல் அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது, பெண்களிடம் திமுக கட்சியின் அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,
திமுகவினரால் பெண்கள் தொடர்ந்து இழிவாகவும், ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசப்பட்டு அவமதிக்கப்படுகின்றனர் என குற்றம்சாட்டினார்.
மேலும், “ஓசி பஸ்ல போறீங்க” என பெண்களை கேலி செய்ததாக குற்றம்சாட்டப்படும் அமைச்சர் பொன்முடி உட்பட பல திமுக தலைவர்கள் தமிழ் பெண்களை தொடர்ந்து அவமதித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக பெண்கள் திமுகவுக்கு தக்க பதிலடி கொடுத்து தோற்கடிப்பார்கள் என்பது உறுதி என்றும் நாராயணன் திருப்பதி கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ