Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச.)
மகளிர் இட ஒதுக்கீடு, மக்களவை தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று (16.04.2026) காலை 11 மணியளவில் தொடங்கியது.
அதே சமயம் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மக்களவை உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து அவைக்கு வந்திருந்தனர்.
மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், 2026ஆம் ஆண்டுக்கான அரசியலமைப்பின் 131வது திருத்த சட்ட மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்த முன்மொழிந்தார்.
மேலும் யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதாவையும், தொகுதி மறுவரையறை மசோதாவை அறிமுகப்படுத்த முன்மொழிந்தார்.
அப்போது அரசியலமைப்பின் 131வது திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பு கோரி வலியுறுத்தினர்.
அதிலும் குறிப்பாக திமுக எம்பி, டி.ஆர்.பாலு, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் எம்பி ஓவைசி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் இந்த மசோதாக்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதே போன்று திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிபிஐ (எம்) உள்ளிட்ட கட்சிகளும் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இருப்பினும் இந்த 3 மசோதாக்களை மக்களவையில் அறிமுகம் செய்ய 251 பேர் ஆதரவு தெரிவித்தனர்.
185 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முன்னதாக குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா அறிமுகம் ஆக இருந்த நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடந்தது.
இதனையடுத்து 3 மசோதாக்களும் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது தொகுதி மறுவரையறை மசோதா குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த மசோதா மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கும் பட்சத்தில் அதற்கு எதிராக திமுக எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள் என ராகுல் காந்தியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b